Tuesday, August 29, 2017

உலகத்தில் யார் சிறந்தவர்?


உலகத்தில் யார் சிறந்தவர்?

கர்னாடக ஹரிதாசர்கள் - ஸ்ரீமத்வாச்சாரியர் தோற்றுவித்த த்வைத சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சித்தாந்தத்தின் சிறப்புகளை - சமஸ்கிருதத்தில் இருந்த தத்துவங்களை - எளிய கன்னடத்தில் மொழிபெயர்த்து அனைவருக்கும் புரியுமாறு பாடியவர்கள். 



த்வைத சித்தாந்தத்தின் முதல் தத்துவம் - ஹரி சர்வோத்தமன். ஸ்ரீஹரியே அனைவரைவிட உயர்ந்தவன். இந்த தத்துவத்தை வைத்தே பற்பல பாடல்களை தாசர்கள் பாடியுள்ளனர். அந்த ஸ்ரீஹரியின் சிறப்புகளை புரந்தரதாசர் விளக்குவது போல் பாடி, தத்துவத்தை நமக்குப் புரிய வைப்பதே இன்றைய பாடல். 

***

ஈ பரிய சொபகாவ தேவரலி நா காணே
கோபி ஜனப்ரிய கோபாலகல்லதே (ஈ பரிய)

இந்த (கீழ்க்கண்ட) சிறப்புகளை வேறு எந்த தேவரிடத்திலும் நான் கண்டதில்லை;
கோபியர்களின் மனங்களைக் கவர்ந்த கோபாலனைத் தவிர (ஈ பரிய)

தொரெயதனதலி நோடே தரணிதேவிகே ரமணா
சிரியதனதலி நோடே ஸ்ரீகாந்தனு
ஹிரியதனதலி நோடே சரசிஜோத்பவனய்யா
குருவுதனதலி நோடே ஜகதாதி குருவு (ஈ பரிய)

முதலாளிகளில் யார் பெரிய முதலாளி என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே முதலாளி
செல்வந்தர்களில் யார் பெரிய செல்வந்தர் என்று பார்த்தால் இவர் இலக்குமிக்கே கணவன்
மூத்தவர்களில் யார் மூத்தவர் என்று பார்த்தால் இவர் பிரம்மாவிற்கே தந்தை
ஆசான்களில் யார் பெரிய ஆசான் என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே ஆசான் (ஈ பரிய)

பாவனத்வதி நோடே அமர கங்கா ஜனக
தேவத்வததி நோடே திவிஜரொடெயா
லாவண்யதலி நோடே லோகமோஹகனய்யா
ஆவ தைர்யதி நோடே அசுராந்தகா (ஈ பரிய)

புனிதர்களில் யார் மிகப் புனிதர் என்று பார்த்தால் இவர் புனிதமான கங்கையின் தந்தை
தேவர்களில் யார் பெரியவர் என்று பார்த்தால் இவர் தேவாதி தேவர்
அழகானவர்களில் யார் சிறந்தவர் என்று பார்த்தால், இவர் உலகத்தையே மயக்குபவர்
தைரியமானவர்களில் யார் மேலானவர் என்று பார்த்தால், இவர் பல அசுரர்களையே வென்றவர்

ககனதலி சஞ்சரிப கருட தேவனே துரக
ஜகதீதரசேஷ பரியங்க சயன
நிகம கோசர புரந்தர விட்டலகல்லதே
மிகிலாத தைவகளிகே ஈ பாக்யவுண்டே (ஈ பரிய)

வானத்திலேயே பறக்கும் கருட தேவனே இவனது வாகனம்
சேஷமே இவனது வாகனம்
வேதங்களில் பாடப்பட்டிருக்கும் இந்த புரந்தரவிட்டலனைத் தவிர
(மேலே சொன்ன) இந்த தகுதிகள் வேறு யாருக்கு உண்டு? யாருக்கும் இல்லை (ஈ பரிய)

***

இந்த அழகான பாடல் புத்தூர் நரசிம்ம நாயக் அவர்களின் இனிய குரலில்:



No comments: