Sunday, January 15, 2012

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

கடவுளர்களுக்கு 'காலை வேளை' என்று கருதப்படும் 'உத்தராயண புண்யகாலம்' (ஆறு மாத காலம்) துவங்கிவிட்டது. சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கும் இந்த நாள் மிக புனிதமான நாளாகும்.


பகீரதன் தன் முன்னோர்களுக்கு கங்கைக் கரையில் 'தர்ப்பணம்' செய்தது இந்நாளே. அம்புப்படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர், இந்த நாளுக்காகவே காத்திருந்து தன் உயிரை விட்டார். நாமும் இந்த நன்னாளில் தாசர் பாடல்களில் 'சீசன்-2'வை, அந்த 'ஐந்து கரத்தனை, ஆனை முகத்தனை' வணங்கி துவக்குவோம்.


பிள்ளையாரை பிடிக்காதவர் யாரேனும் இருக்க முடியுமா? தன் செல்ல நண்பனாய் அவரை நினைத்து அவரை வணங்குபவர்களே அதிகம். சரிதானே? அவரைப் போலவே அவர் பாடல்களும் மிக இனிமையானவை. உடனே 'விநாயகனே வினை தீர்ப்பவனே, வேழ முகத்தோனே, ஞான முதல்வனே' பாட்டு நினைவுக்கு வருதா?


கணபதியை குறித்து தாசர்கள் நிறைய பாடல்கள் பாடியிருக்கின்றனர். 'கஜவதன பேடுவே' எனத் தொடங்கும் இன்றைய பாடலில் நாம் தெரிந்துகொள்ளும் சிறப்புச் செய்தி என்னன்னு பார்ப்போம்.


பாசக்கயிறு யாரிடம் இருக்கும்? இதென்ன கேள்வி? எமதர்மனிடம்தான்னு டக்குன்னு சொல்லிடுவீங்க. ஆனா புரந்தரதாசர் என்ன சொல்றாரு? பிள்ளையாரிடமும் பாசக்கயிறு இருக்காம். 'பாச', 'அங்குச' இந்த இரண்டையும் வைத்திருப்பவனே.


அங்குசம் தெரியும். மிகப்பெரிய யானையையும் அடக்கிடும் சிறிய ஆயுதம் - அங்குசம். நம் மனமென்னும் யானையை அடக்கி, சுயகட்டுப்பாடு வேண்டும் என்று வலியுறுத்த அங்குசத்தை ஏந்தியிருக்கிறார் என்று சொல்கிறார் தாசர்.


சரி. பாசக்கயிறு? இறப்புக்கு அப்பாற்பட்ட விநாயகனை வணங்குபவர்களுக்கு மரணம் குறித்த பயம் அகற்றுபவன் என்பதைக் காட்டவே பாசக்கயிறு வைத்திருக்கிறார் என்று தாசர் விளக்குகிறார்.


கஜானனின் பெருமைகளை சொல்லி, அவன் தாள் வணங்கி தாசர் கேட்பது என்னன்னா, சர்வோத்தமனான அந்த ஸ்ரீமன் நாராயணனை எப்பொழுதும் நினைத்திருக்க செய்யுமாறு அருள் செய் என்பதேயாகும். வழக்கம்போல் மிக எளிதான சொற்கள், ஆழ்ந்த கருத்துகள். பாடல், அதன் பொருள், தொடர்ந்து சில காணொளிகள் பாருங்க. கணபதி பப்பா மோரியா!


***


கஜவதன பெடுவே கௌரி தனய
த்ரிஜக வந்திதனே சுஜணர பொரவென (கஜவதன)

யானை முகத்தனே கௌரியின் புதல்வனே
 மூவுலகத்திலும் அனைவராலும் வணங்கப்படுபவனே
நல்லவர்களை காப்பவனே (கஜவதன)

பாசாங்குசதர பரம பவித்ர
மூஷிகவாகன முனிஜன பிரேம (கஜவதன)

பாசக்கயிறையும், அங்குசத்தையும் ஏந்தியவனே, பரம பவித்ரனே
மூஞ்சூறு வாகனனே, முனிவர்களுக்கு பிரியமானவனே (கஜவதன)


மோததி நின்னய பாதவ தோரோ
சாது வந்திதனே ஆதரதிந்தலி (கஜவதன)


சந்தோஷத்துடன் (கருணையுடன்) உன் பாதங்களைக் காட்டு
மிகவும் பணிவுடன் சாதுக்களால் வணங்கப்படுபவனே (கஜவதன)


சரசிஜநாப ஸ்ரீ புரந்தரவிட்டலன
நிருத நெனேயுவந்தே தய மாடோ (கஜவதன)

நாபிக் கமலத்தில் தாமரைக்கொடியை கொண்ட ஸ்ரீ புரந்தரவிட்டலனை எப்போதும் (நான்) நினைக்குமாறு தயை காட்டுவாய் (கஜவதன)

**** ****

இந்த வாண்டூஸ் பாடுவதையும் கேளுங்க. அருமையா இருக்கும். ****

No comments: